தேங்காய்

R.k. Mugeskumaar
ஐயோ தேங்காய் அல்ல... ஆஹா தேங்காய்!
வே.கிருஷ்ணவேணி

''தேங்காயைச் சாப்பாட்டுல சேர்த்துக்காதீங்க... உடம்பு பருத்துடும். ஹார்ட் அட்டாக் வந்துடும்.''

- இப்படி தேங்காய் பற்றி பயமுறுத்தலான விஷயங்களையே கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாக இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், ''இது அத்தனையுமே உலக அளவிலான பிற எண்ணெய் வியாபார நிறுவனங்கள் செய்த தந்திரம். உண்மையில் தேங்காய் உடலுக்கு நல்லது. அதிலிருக்கும் சத்துக்கள் இணையற்றவை. தைரியமாக தேங்காயைப் பயன்படுத்துங்கள்'' என்று நம்பிக்கையூட்டுகிறார், பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன்.

''அட, என்னங்க நீங்க... பத்து ரூபாய், பன்னிரண்டு ரூபாய்னு நேத்து வரைக்கும் தேங்காய் வித்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் இதைச் சொல்லல... இப்ப, ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு மேல விக்குது! இந்த நேரத்துல வந்து சொல்றீங்களே'' என்கிறீர்களா..?

இதற்கும் அழகான பதிலை இப்படி முன்வைக்கிறார் சிவராமன்...

''150 ரூபாய் கொடுத்து பிள்ளைகளுக்கு சந்தோஷமாக பீட்ஸா வாங்கிக் கொடுக்கிறோம். கண்ட சிக்கன் உணவுகளையெல்லாம் 200, 300 ரூபாய்க்கு வாங்கித் தருகிறோம். இவையெல்லாம் தேவையற்ற உடல் பிரச்னைகளை அள்ளிக் கொண்டு வருபவை. ஆனால், தன் மருத்துவக் குணங்களால் பிரமிக்க வைக்கும் இயற்கை உணவான தேங்காயை, 20 ரூபாய் கொடுத்து வாங்க யோசிக்கிறோம். 'தேங்காய், கொலஸ்ட்ரால்... ஆகவே ஆகாது’ என்று அதை ஒதுக்கியதன் பின்னணியில் இருக்கும் அறியாமை மற்றும் அரசியலை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது அவசியம்!''

தேங்காய் எண்ணெயின் வரலாறு!

தொடர்ந்து பேசிய சிவராமன், ''சுவையைவிட, மருத்துவப் பயனை வைத்தே உணவுப் பொருட்களைக் கொண்டாடும் நம் முன்னோர்கள், தேங்காய் தீயது என்றால், அப்போதே ஒதுக்கியிருப்பார்கள். ஆனால், சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் தேங்காய் முக்கிய உணவு மற்றும் மருந்துப் பொருளாகவே உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தெற்காசிய பகுதியில் கிட்டத்தட்ட பல ஆயிரம் ஆண்டுகளாகவே தேங்காய் மற்றும் அதன் எண்ணெய் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த தேங்காயின் ராஜ்யத்தை, 1970-ம் ஆண்டுகளில் மாற்றியது உலகச் சந்தை அரசியல். எண்ணெய் வர்த்தகத்தில் மிகப்பெரும் போட்டி எழுந்த அந்தக் காலகட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆலிவ் எண்ணெயையும், சூரியகாந்தி எண்ணெயையும் பிரதானப்படுத்துவதற்காக, தேங்காயின் ஆளுமையைக் குறைக்கும் வேலைகளில் இறங்கி, வெற்றிகண்டுவிட்டன.

உண்மை என்ன..?!

தேங்காயில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். எந்த ஒரு தாவர எண்ணெயிலிருந்தும் கொலஸ்ட்ரால் நேரடியாக ரத்தத்தில் கலப்பது கிடையாது. நெய் மற்றும் புலால் உணவுகளால் மட்டுமே நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டக் கூடிய 'மோனோலோரின்' எனும் பொருள் தேங்காயில் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. இது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன் ரத்தக் கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது. தேங்காயைத் தவிர, இந்த சக்தி இயற்கையாகவே கிடைக்கும் இன்னொரு இடம்... தாய்ப்பால் மட்டுமே!

ஆனால், திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் பிரசாரம் நம்மிடம் வந்து சேர்ந்த அளவுக்கு, அதை மறுத்துச் சொன்ன மருத்துவ உண்மைகள் வந்து சேராததால், 'தேங்காய் அதிகம் சேர்க்கக்கூடாது... ஆகாது!’ என்று அறியாமையிலேயே இருக்கிறார்கள் பலர்'' என்று வருத்தம் பொங்கிய சிவராமன்,

''இதய நோய் வந்துவிடும் என்று, தேங்காயைத் தவிர்ப்பவர்களுக்கு ஒரு செய்தி... இதய நோயையே குணப்படுத்தும் ஆற்றல் தேங்காய்க்கு உண்டு. ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதில், தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு பெரிதளவு துணைபுரிகிறது. இன்று அனைவருக்கும் உடல் உழைப்பு குறைவதே கொலஸ்ட்ரால் சேர்வதற்குக் காரணம். உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சிறிதளவு தேங்காயை சேர்த்துக் கொள்ளலாம். அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயைத் தவிர்க்கலாம்.

மிகச்சிறந்த குளிர்பானம், இளநீர். கால்சியம், பொட்டாசியம், குளுக்கோஸ் நிரம்பியது. இது டி.என்.எஸ் (டெக்டோரிடின் வித் நார்மல் சலைன்) கொண்ட ஓர் உணவுப் பொருள். உடலுக்கு அவசரமாக உப்பு மற்றும் சர்க்கரை சத்துக்கள் தேவைஎன்றால், உடனடியாகக் கொடுக்கக் கூடியதுதான் இந்த சலைன். இது, தேங்காயில் நிறைந்திருக்கிறது. இது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு எனர்ஜியைக் கொடுக்கக் கூடியது'' என்றெல்லாம் சொன்ன சிவராமன்,

''மொத்தத்தில், ஓட்டுக்குள் அடைபட்டிருக்கும் அமிர்தமே தேங்காய்!'' என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்!

குழந்தைகளுக்கு இது சத்துணவு!

தாய்ப்பாலுக்கு பின் முதலில் கொடுக்கப்படும் திட உணவுகள், மற்றும் அரிசி கஞ்சியில் மூன்று அல்லது நான்கு துளி தேங்காய் எண்ணெய் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பெயர்தான் ஹை கலோரி மீல் (ஹெச்.சி.எம்). இது, குழந்தைகளின் எடையைக் கூட்டி, சருமத்தை வழுவழுப்பாக்கும். ஒல்லியாக இருக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கு, தேங்காய்ப் பால் கொடுக்கலாம். பருப்பு, அரிசி இரண்டையும் (அரிசி ஒரு பங்கு என்றால், பருப்பு கால் பங்கு) நன்றாகக் குழைய வைத்து, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை, 4 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்தும் கொடுக்கலாம்.

பெண்கள் பலரும் கேசத்துக்கு எண்ணெயே வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் பிசுபிசுப்பில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை மனதில் கொண்டே, 'பிசுபிசுக்கவே செய்யாது!’ என்றபடி தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பை எடுத்துவிட்டு சந்தைக்கு கொண்டு வந்துள்ளன பல நிறுவனங்கள். கொழுப்பை நீக்கித் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் எந்தவிதமான எசன்ஸும் இல்லை. இது நம் கேசத்துக்கு, உடலுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது.

உடல் சூட்டைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும் மிக 
முக்கிய உணவுப் பொருள் தேங்காய் என்கிறது சித்த மருத்துவம். வயிற்றுப் புண் ஆற, தேங்காய்ப் பால் போல மருந்து எதுவும் இல்லை. அடிக்கடி வாய்ப்புண் ஏற்படுபவர்களும் தேங்காய்ப் பால் பருகலாம்.

-- Source.அவள் விகடன்
R.k. Mugeskumaar's photo.

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்

Senthamizhan Maniarasan with Engals Raja and 24 others இனிப்பும் முதல் மழையும் இணைய விற்பனையில்! ம.செந்தமிழன்