Dont eat biscuits

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது.

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன.

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை  எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்.

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச்  சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு  என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”

Comments

Popular posts from this blog

Senthamizhan Maniarasan shared a link. 20 March 2013

Senthamizhan Maniarasan 13 October 2013 ஒரு நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னால், அது அலோபதி ’அறிவுக்கு’ ஆத்திரத்தை உண்டாக்குகிறது.

Senthamizhan Maniarasan 15 December 2013 மருத்துவமனைக்குச் சென்று மரணம் அடைவோர்! -இந்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ம.செந்தமிழன்